இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 14 Jun 2018 9:00 PM GMT (Updated: 14 Jun 2018 8:29 PM GMT)

இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் 30-ந் தேதி ஆகும்.

சென்னை,

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2018-2019-ம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர் படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் 18-ந்தேதி காலை 10 மணிக்கு www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அன்று தொடங்கி 30-ந் தேதி மாலை 5 மணிவரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் தங்களுடைய விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்துவதற்கு பற்று அட்டை (டெபிட் கார்டு ), கடன் அட்டை (கிரெடிட்கார்டு ) மற்றும் இணைய வங்கி சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.250 ஆகும்.

மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு (சேவ்) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் கலந்தாய்வின் போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, சிறப்பு இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பங்கள் பதிவேற்ற வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை மேற்கூறிய இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு க.அறிவொளி தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர மாணவர்கள் கூட்டம் அலை மோதும். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு அதிகமாக இருந்தது. பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

ஆனால் தற்போது அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கூட மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே இருந்தது. இதனால் கடந்த ஆண்டு 2 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் மாணவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.

Next Story