ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி


ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2018 11:30 PM GMT (Updated: 16 Jun 2018 10:09 PM GMT)

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை நிராகரித்த ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்தால் நல்ல முடிவாக இருக்கும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது.

பேரறிவாளன் உள்பட 7 பேரும் 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூறி உள்ளனர். அவர்களை ஜனாதிபதி விடுதலை செய்வார் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஜனாதிபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்து, 7 பேரையும் விடுதலை செய்தால் நல்ல முடிவாக இருக்கும்.

தங்கதமிழ்ச்செல்வன், ஐகோர்ட்டில் மனுவை வாபஸ் பெற முடிவு செய்து இருப்பதாகவும், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தேர்தல் வரும்போது குக்கர் சின்னத்தில் போட்டியிடலாம் எனவும் தனது உணர்வை என்னிடம் கூறினார். மற்றவர்கள் சட்டரீதியாக சந்திப்பதாக தெரிவித்து உள்ளனர்.

தலைமை நீதிபதியிடம் வாபஸ் மனு தாக்கல் செய்தால் 3-வது நீதிபதி நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் 3-வது நீதிபதி முன் விசாரணைக்கு வரும்போது வாபஸ் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளார்.

இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் அரசியல் ரீதியாக சவாலாக ஏற்று பணியாற்ற ஒரு வாய்ப்பாக இருக்கும். ஜெயலலிதா தொகுதியில் நான் வெற்றி பெற்றது போல், எம்.ஜி.ஆர். தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் துரோக ஆட்சியாளர்களுக்கு இரட்டை இலைக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்தான் என்பதை நிரூபிக்க வாய்ப்பாக இருக்கும்.

18 பேரும் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்பதில் ஒன்றாக உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடுவோம்.

டெல்லிக்கு முதல்-அமைச்சர் செல்வது பெரியவிஷயம் அல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா டெல்லி சென்றால் அது பெரிய விஷயமாக இருக்கும்.

தூத்துக்குடியில் பலியானவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி இருந்தால் நல்ல முதல்-அமைச்சராக அவரை ஏற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story