தூத்துக்குடி கலவர வழக்கு: வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது


தூத்துக்குடி கலவர வழக்கு: வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது
x
தினத்தந்தி 21 Jun 2018 10:30 PM GMT (Updated: 21 Jun 2018 7:38 PM GMT)

தூத்துக்குடி கலவர வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கலவர வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் பாளை. சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி சிப்காட் போலீசார் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் (37), தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அரிராகவன் உள்ளிட்ட 100 பேர் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி 144 தடை உத்தரவை மீறி, போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், வாகனங்களை எரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த வக்கீல் வாஞ்சிநாதனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையம் முன்பு நின்றபோது பிடிபட்டார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

விசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். அதன்பேரில் அவர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக போலீசார் கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்து இருந்தனர். தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கி இருப்பதால் தூத்துக்குடியில் பரபரப்பும், பதற்றமான நிலையும் உருவாகி உள்ளது.

Next Story