பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன திருமதி உலக அழகி பட்டம் வென்ற பெண் பேட்டி


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன திருமதி உலக அழகி பட்டம் வென்ற பெண் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2018 9:08 PM GMT (Updated: 22 Jun 2018 9:08 PM GMT)

இந்தியாவில் கூட்டு குடும்ப வாழ்க்கை முறை குறைந்து வருவதால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண் ஜெயஸ்ரீ மகேஷ் கூறினார்.

கோவை

இந்தியாவில் கூட்டு குடும்ப வாழ்க்கை முறை குறைந்து வருவதால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று திருமதி உலக அழகி பட்டம் வென்ற கோவை பெண் ஜெயஸ்ரீ மகேஷ் கூறினார்.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ மகேஷ்(வயது 49). இவர் உடற்பயிற்சி சிகிச்சை நிபுணராக உள்ளார். இவர் கடந்த 2006–ம் ஆண்டு திருமதி கோவை அழகி பட்டத்தையும், 2016–ம் ஆண்டு திருமதி இந்திய அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 13–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி நடைபெற்றது.

இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 85 பேர் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் சார்பில் கோவையை சேர்ந்த ஜெயஸ்ரீ கலந்து கொண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளார். இவரது கணவர் மகேஷ் குமார் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

திருமதி உலக அழகி பட்டம் வென்ற ஜெயஸ்ரீ மகேஷ் நேற்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அமெரிக்காவில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திருமதி உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே சாதிக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைத்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்து உள்ளது.

இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கூட்டு குடும்பங்கள் அதிகமாக இருந்தன. இதனால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அனுபவத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். மேலும் அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்தனர்.

தனிக்குடும்பம் காரணமாக பெற்றோர்களால் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க முடியாமல் போய் விடுகிறது. தற்போது கணவன், மனைவி இருவரும் பணிக்கு செல்கின்றனர். இதனால் குழந்தைகள் தனிமையில் இருக்கின்றனர். இந்த தனிமையை சில நபர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பெண் குழந்தைகளிடம் அத்துமீறுகின்றனர். எனவே கூட்டுக்குடும்ப வாழ்கை முறை குறைந்து வருவதால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர், அவர்களின் நட்பு வட்டாரத்தில் யார் உள்ளனர் என்று கண்காணிக்க வேண்டும். இளம் பெண்களும் தாங்கள் செல்லும் இடங்கள், யாருடன் செல்கிறோம் என்பது குறித்த விபரங்கள், பயணம் செய்யும் வாகனங்களின் பதிவு எண், டிரைவர் விபரம் போன்றவற்றை தங்களது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும். மேலும் தாய்–மகள் உறவு என்பது நல்ல தோழிகளாக இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டும். இதுதவிர இளம் வயதினரிடையேபாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story