மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்


மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்
x
தினத்தந்தி 24 Jun 2018 9:15 AM GMT (Updated: 24 Jun 2018 9:15 AM GMT)

ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு. மாநில அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது. தமிழக அரசின் எந்த துறையின் செயல்பாட்டையும் இதுவரை ஆளுநர்  விமர்சித்தது இல்லை. மேலும் ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆளுநர்களின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மக்களின் நலனுக்காக ஆளுநரின் இது போன்ற ஆய்வுகள் தொடரும்” எனக் கூறியுள்ளது. 

Next Story