8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 July 2018 11:53 PM GMT (Updated: 1 July 2018 11:53 PM GMT)

மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றும், அத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தித் தருவது மட்டும்தான் மாநில அரசின் பணி என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். முதல்-அமைச்சரின் இந்தக் கருத்து உண்மை தான் என்றாலும், மத்திய அரசின் இந்த வாழ்வாதாரப் பறிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக மக்களின் நிலங்களை மிரட்டி, உருட்டி கையகப்படுத்த முதல்-அமைச்சர் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

புதிய சாலை அமைக்கப்படுவதற்கான நோக்கங்களில் நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பதும் ஒன்று என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தான் நகைச்சுவையாகும்.

ஆட்சி அதிகாரமும், காவல்துறையும் கைகளில் இருக்கும் அகந்தையில் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என எடப்பாடி பழனிசாமி நினைத்தால் தோல்வியடைந்து விடுவார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு இடதுசாரி கூட்டணி ஆட்சி செய்தது.

ஆனால், அடக்குமுறை மூலம் சிங்கூர் மற்றும் நந்திகிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கத் துடித்தது தான், ஆட்சிக் கட்டிலில் இருந்து இடதுசாரிகளை தூக்கி வீசியது என்பதை அரசு மறந்து விடக்கூடாது. மக்கள் நலனில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அக்கறை இருந்தால் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் அச்சத்தை போக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story