யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அ.தி.மு.க. என்றைக்கும் இருக்கும்


யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அ.தி.மு.க. என்றைக்கும் இருக்கும்
x
தினத்தந்தி 2 July 2018 12:08 AM GMT (Updated: 2 July 2018 12:08 AM GMT)

யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அ.தி.மு.க. என்றைக்கும் இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

இன்று தமிழ்நாட்டில் இருக்கின்ற எதிர்க்கட்சிகளுக்கும், எதிரிக் கட்சிகளுக்கும் கண்ணை உறுத்துகிற ஒரே விஷயம். வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் ஆட்சிதான். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் தளர்ந்து விடுவார்கள், கவிழ்ந்து விடுவார்கள் என்று நினைத்தால் நிமிர்ந்து விட்டார்களே, நிலைத்துவிட்டார்களே என்ற அதிர்ச்சியால் எதிரிகளும், துரோகிகளும் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்.

“இன்று ரொக்கம், நாளை கடன்” என்று எழுதி வைத்திருப்பார்கள். எப்பொழுது போய்ப்பார்த்தாலும், அந்த போர்டுதான் தொங்கிக்கொண்டிருக்கும். கடனே வாங்க முடியாது. அதைப்போல சில கட்சிகள் அ.தி.மு.க. ஆட்சி 2 மாதத்தில் முடிந்துவிடும் என்று தங்கள் கழுத்துகளில் போர்டு மாட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் எத்தனை காலம் ஆனாலும், அந்த போர்டு அவர்கள் கழுத்திலே தொங்கிக்கொண்டுதான் இருக்கும். அடுத்த மாதம் பார்த்தாலும், அடுத்த வருடம் பார்த்தாலும் அப்படியே தான் இருக்கும். இப்படி சாதனைகள் படைத்துவரும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்கும், நம்முடைய கட்சியை உடைப்பதற்கும் சில துரோகிகள் திரை மறைவு வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம், இரட்டை இலையை மீட்போம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சுபவர்கள் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிழலில் வித்தை காட்டிக்கொண்டிருந்த சிலர் நிஜத்திலும் வித்தை காட்டலாம் என்று எண்ணி இப்பொழுது புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திரையில் தோன்றி வீரவசனங்கள் பேசியதை ரசித்த மக்கள், இப்போது அரசியல் களத்தில் பேசுவதை எல்லாம் நகைச்சுவை காட்சிகளாகத்தான் நினைத்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையிலே மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தியது ஜெயலலிதாவின் ஆட்சியிலேதான் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். அந்த மாற்றமும், ஏற்றமும் ஜெயலலிதாவின் வழிநடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் தொடரும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னார். ஜெயலலிதா சொன்னது போலவே அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். அது விசுவாசத்தொண்டர்களாகிய நம்மிடம் தான் இருக்கும். தமிழக மக்களுக்கு நிழல் கொடுக்கும் ஆலமரமாக, யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அ.தி.மு.க. என்றைக்கும் இருக்கும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார். 

Next Story