16 வயது சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை


16 வயது சிறுமியை திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2018 10:45 PM GMT (Updated: 3 July 2018 8:00 PM GMT)

16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு (வயது 31), கட்டிடத்தொழிலாளியான இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் நேற்று முன்தினம் காலை மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.

மாலையில், மார்த்தாண்டத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். உறவினர்களின் வருகையால் திருமண வீடு களைகட்டியிருந்தது.

இந்தநிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆவதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் திருமண வீட்டுக்கு வந்து மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு 16 வயதே ஆவது தெரிய வந்தது. உடனே திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து, வினுவையும், சிறுமியையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், 10-ம் வகுப்பு வரை படித்துள்ள சிறுமி, தொடர்ந்து படிக்க விரும்புவதாக தெரிவித்ததால் அவர் அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், வினுவுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சோகத்துடன் வீட்டுக்கு வந்த வினு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு மின்விசிறியில், திருமணத்தின்போது மணப்பெண் கட்டியிருந்த முகூர்த்த புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் வினு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். திருமண வரவேற்பின்போது அதிகாரிகள் தலையிட்டு மணப்பெண்ணை பிரித்து சென்றதால் ஏற்பட்ட அவமானத்தால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

Next Story