மத்தியில் பா.ஜனதா அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


மத்தியில் பா.ஜனதா அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x

இப்போது இருக்கக்கூடிய பலத்தை விட அதிகமான பலத்துடன் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுவாமிநாதன், காங்கிரஸ் பிரமுகர் ராமசாமி அய்யர் ஆகியோர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சென்னையில் நேற்று சந்தித்து தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர். சென்னை துறைமுக பொறுப்புக்கழக விருந்தினர் இல்லத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

பா.ஜ.க.வில் இணைந்த சுவாமிநாதன், ராமசாமி அய்யர் ஆகிய 2 பேரையும் பொன்னாடை போர்த்தி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். அப்போது பா.ஜ.க.வை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தாக வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் முழுமையாக ஏற்பட்டாக வேண்டும் என்கிற உணர்வு தமிழக மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க.வில் பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள் இணைந்து வருகிறார்கள். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள், எத்தனை திட்டங்கள் போட்டு, எத்தனை கூட்டணி வைத்தாலும் கூட இப்போது இருக்கக்கூடிய பலத்தை விட அதிகமான பலத்துடன் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைக்கும்.  

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மீண்டும் நடைபெறப் போகிறது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 9-ந் தேதி சென்னை வருகிறார். 10-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மிக முக்கியமான பொறுப்பாளர்கள் 20 ஆயிரம் பேர் கலந்துகொள்ளக்கூடிய ஒரு பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் புகுந்துள்ளனர். அவர்கள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியது மாநில அரசின் கடமை. தற்போது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

8 வழிச்சாலை திட்டம் என்பது மேற்கு மாவட்டங்கள் அனைத்திற்கும் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுவாமிநாதன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 1991-ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மத்திய மற்றும் மாநில தலைமையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து சுவாமிநாதன் கூறும்போது, “காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இனிமேல் வளரவேண்டும் என்றால் இன்னொரு காமராஜர் பிறந்து வந்தால் மட்டுமே முடியும். என்னுடைய பழைய நண்பர்களை அழைத்துப்பேசி, பா.ஜ.க.வை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவேன்” என்றார். 

Next Story