அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைப்பதா? வைகோ கண்டனம்


அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைப்பதா? வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 7 July 2018 7:53 PM GMT (Updated: 7 July 2018 7:53 PM GMT)

அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், போராட்டம் மேலும் எழும் என வைகோ கூறியுள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை குறித்த பிரச்சினையில், நிலங்களை இழக்கின்ற வேதனையால் தவித்து அபயக்குரல் எழுப்பும் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காஞ்சி மக்கள் மன்றம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 19 பேரை, காவல்துறை கைது செய்து, அடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்கள் பயணித்த வேனையும் பறிமுதல் செய்துள்ளது.

இதில் குறிப்பாக, காஞ்சி மக்கள் மன்றம், செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் மகேஷ், ஜெஸ்ஸி ஆகியோரை கைது செய்துள்ளனர். தேசப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற சட்டங்களில், பொய்வழக்குப் போடும் நோக்கத்தில் காவல்துறை இருப்பதாக அறிகின்றேன். ‘இம், என்றால் சிறைவாசம் என்ற சொற்றொடரை, அதிகார மமதையில் காவல்துறையின் மூலம் தமிழக அரசு அரங்கேற்றி வருகின்றது.

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற வகையில் செயல்படும் தமிழக அரசின் போக்குக்கு, பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், அடக்குமுறையின் மூலம் போராட்டங்களை நசுக்க நினைத்தால், அது ஒருபோதும் வெற்றி பெறாது; போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும் என அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story