7-வது ஊதியக் குழுவின் திருத்திய ஊதிய விகிதம் அமல் பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு விகிதம்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் வழங்கப்பட இருக்கிறது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் ஆளுகைக்குட்பட்ட மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அதற்கு இணையான பதவியில் உள்ள பணியாளர்களுக்கான திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகள், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, மத்திய அரசால் அமைக்கப்பட்ட 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், மேற்கண்ட பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளை வழங்குவதற்கான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள உயர்கல்வித்துறை இயக்குநரின் பரிந்துரை மீது தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
இதனடிப்படையில், பல்கலைக்கழக நிதிநல்கை குழுவின் ஆளுகைக்குட்பட்ட, பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அதற்கு இணையான பதவியில் உள்ள பணியாளர்கள் தங்களது திருத்திய ஊதிய விகிதம் மற்றும் படிகளை 01.01.2016 முதல் கருத்தியலாகவும், 01.10.2017 முதல் பணப்பயனாகவும் பெறலாம்.
மேலும் மேற்கண்ட பணியாளர்கள் 01.10.2017 முதல் 30.06.2018 வரையிலான திருத்திய ஊதிய விகித நிலுவைத்தொகையினை பணமாகவும் பெறலாம். இதன் மூலம், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அதற்கு இணையான பதவியில் உள்ள பணியாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை ஊதிய உயர்வு பெறுவர்.
இத்திருத்திய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவதால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி கூடுதல் நிதித்செலவினம் ஏற்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story