ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி சிறுமியை திருமணம் செய்த சென்னை வாலிபர் கைது


ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி சிறுமியை திருமணம் செய்த சென்னை வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 July 2018 9:43 PM GMT (Updated: 7 July 2018 9:43 PM GMT)

ஸ்ரீரங்கம் கோவிலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி, சிறுமியை திருமணம் செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீரங்கம், 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் காந்திகண்ணன் (வயது 33). இவருக்கும், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த 5-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெறுவதாக சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

உடனே அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்துவதற்குள், திருமணம் முடிந்து இருவீட்டாரும் சென்று விட்டனர். சிறுமியின் பெற்றோரிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, தங்கள் பெண்ணுக்கு 19 வயது முடிந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே மணமகன் கோவிலில் கொடுத்த சான்றிதழ்கள் போலி என்பதும், சிறுமிக்கு 16 வயது தான் ஆகி உள்ளதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே கோவிலில் திருமணம் நடந்தபோது, மணமகன் காந்திகண்ணனிடம் கோவில் ஊழியர்கள் அசல் சான்றிதழ்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர் தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், தலைமைச்செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும் கூறி உள்ளார்.

இந்தநிலையில் காந்திகண்ணன் நேற்று ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பதும், அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் சில ஆண்டுகள் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்ததும், அதன்பிறகு சென்னையில் தண்ணீர் விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வருவதும் தெரியவந்தது.

கைது

சிறுமியின் குடும்பத்துக்கு ஏற்பட்ட கடன்தொகையை காந்திகண்ணன் அடைத்துள்ளார். கொடுத்த கடனை திருப்பி கொடுங்கள் அல்லது உங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள் என்று அவர் வற்புறுத்தியதால், இந்த திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து காந்திகண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story