சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு: தனியார் நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை


சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு: தனியார் நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 7 July 2018 10:30 PM GMT (Updated: 7 July 2018 9:58 PM GMT)

சத்துணவு முட்டை வினியோகத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.

திருச்செங்கோடு,

சத்துணவு முட்டை வினியோகம் செய்யும் கிறிஷ்டி பிரைடு கிராம் என்ற நிறுவனம் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் ஆண்டி பாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமி வீட்டிலும், கூட்டப்பள்ளியில் உள்ள நிறுவனத்தின் ஆடிட்டர் ராமச்சந்திரன் வீட்டிலும் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது.

அப்போது மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஏற்கனவே கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் உடுப்பத்தான்புதூர் பகுதியில் தனியார் மாவு நிறுவனத்துக்கு சொந்தமான சத்து மாவு தயாரிக்கும் ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக நடத்திய சோதனை நேற்று அதிகாலை நிறைவடைந்தது.

இதேபோல புதுச்சத்திரம் தனியார் மாவு நிறுவன ஆலையில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் அதிகாரிகள் விசாரணையை முடித்து விட்டு கிளம்பி சென்றனர்.

ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் காசாளர் கார்த்திகேயன் (வயது 32) என்பவரிடம், அந்த நிறுவனத்தின் பின்பக்கம் உள்ள வீட்டில் வைத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தண்ணீர் குடித்து விட்டு வருவதாக கூறிச்சென்ற அவர் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரிடம் விசாரணை மேற்கொண்டதால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்று தெரிகிறது. 

Next Story