‘நீட்’ தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த தமிழக அரசு வலியுறுத்தும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


‘நீட்’ தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த தமிழக அரசு வலியுறுத்தும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 8:00 PM GMT (Updated: 8 July 2018 7:49 PM GMT)

ஆண்டுக்கு ஒரு முறை ‘நீட்’ தேர்வு நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோவை, 

ஆண்டுக்கு ஒரு முறை ‘நீட்’ தேர்வு நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.ஏ. படிப்பு

பள்ளி கல்வித்துறையின் சிறப்பு திட்ட ஆய்வு விரைவில் சென்னை கோவை, மதுரை, திருச்சியில் நடைபெற உள்ளது. கல்வித்துறையின் பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறவும், ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வதற்கும், ஒவ்வொரு பள்ளிகளையும் ஆய்வு செய்யும் வகையிலும் கோவையில் வருகிற 12-ந் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில் இருந்து உதவி கல்வி அலுவலர் வரை அனைத்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

அரசு பள்ளியில் படிக்கும் 20 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு 500 ஆடிட்டர்களை வைத்து கணக்கு தணிக்கை (சி.ஏ.) படிப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 2,700 மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

புதிய பாடத்திட்டங்கள்

12-ம் வகுப்பு படித்த உடன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 12 திறன் பயிற்சிகள் அடுத்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. இந்தியா முழுவதும் 8 லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் பிளஸ்-2 படிக்கும் போதே திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை ‘நீட்’ தேர்வு

மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் ஆண்டுக்கு ஒரு முறை ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்,

புதிய பாடத்திட்டம் குறித்து வருகிற 15-ந் தேதியில் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயோ மெட்ரிக் திட்டம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.

100 உயர்நிலைப்பள்ளி மற்றும் 100 மேல்நிலைப்பள்ளிகள் உருவாக்க நாளை (இன்று) அரசாணை வெளியிடப்பட உள்ளது. கண்பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story