தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது


தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 9 July 2018 10:58 AM GMT (Updated: 9 July 2018 10:58 AM GMT)

முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வரும் லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டசபையில் இன்று நிறைவேறியது. #TNAssembly #Lokayukta

சென்னை

அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற்காக லோக் ஆயுக்தா எனும் அமைப்பை மாநில அரசுகள் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. தமிழக அரசு இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு இன்று லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கான சட்ட முன் வடிவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

2013-ம் ஆண்டு லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இது ஒவ்வொரு மாநிலமும் லோக் ஆயுக்தா என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்பதற்கு வகை செய்கிறது.

அதன்படி பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென்று தமிழ்நாடு மாநிலத்துக்காக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்க உள்ளது.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் போது மாநில அரசின் தொகுப்பு நிதியத்தில் இருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் பின்வருமாறு:-

* லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக இருப்பவர் ஐகோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் அல்லது பொது நிர்வாகத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் நியமிக்கப்படும் 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித் துறையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.

* இந்த பொறுப்புக்கு வருபவர்கள் ஆதாயம் தரும் பதவி எதையும் வைத்திருந்தால் அந்த பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். தொழில் செய்பவராக இருந்தால் அதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

* அமைச்சராக இருக்கின்ற அல்லது அமைச்சராக இருந்துள்ள நபர் எவரும் (அமைச்சர் என்பது முதல்- அமைச்சரும் அடங்கும்) சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அல்லது இருந்துள்ள நபர் எவரும் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இதில் விசாரிக் கப்படுவார்கள்.

* லோக் ஆயுக்தா சட்டமானது மேற்கண்ட நபர்கள் மட்டுமின்றி ஊழல் குற்றச்சாட்டு, ஊழலுக்கு தூண்டி விடுதல், கையூட்டு பெறுதல், ஊழல் சதி செயலில் ஈடுபடுபவர்கள் மீதும் விசாரணை செய்யலாம்.

* மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரை மத்திய அரசின் இசைவின்றி இந்த பிரிவின் படி நடவடிக்கை எடுக்ககூடாது.

* இதில் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பாக முதல்-அமைச்சருக்கு கவர்னர், அமைச்சர்களுக்கு- முதல்-அமைச்சர், அமைச்சரை தவிர்த்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு- சட்டமன்ற பேரவை தலைவர், அரசுத்துறை அலுவலர்களுக்கு-அரசு என்ற வகையில் அதிகார அமைப்பு அமைக்கப்படும்.

* லோக் ஆயுக்தாவானது புகாரை பெற்றுக் கொண்டதின் பேரில் முதலில் அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அந்த புகாரை உறுதிப்படுத்துவதற்கு விழிப்பு பணி ஆணையத்திற்கு புகாரை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து 60 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* லோக் ஆயுக்தாவானது தகவல் முதலியவற்றை தருமாறு பொது ஊழியர் அல்லது பிறநபர் யாரிடமும் கேட்கலாம். இது தொடர்பான விசாரணைக்கு முன் அனுமதி தேவையில்லை.

* லோக் ஆயுக்தா அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

* ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொது ஊழியரை பணி மாறுதல் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க லோக் ஆயுக்தாவுக்கு அதிகாரம் உள்ளது.

* ஆவணங்களை அழிப்பதை தடை செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

* பொது ஊழியருக்கு எதிராக பொய் புகார் கொடுத்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கு செலவுக்கான தொகையையும் அவர் இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

* குற்றம் சாட்டப்படும் நபர் அவருடைய அளவுக்கு எட்டாத வகையில் சம்பவம் நடத்திருந்தாலோ அல்லது குற்றம் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து உரிய முயற்சிகளையும் எடுத்திருந்தாலோ அவர் தண்டிக்கப்படக் கூடாது.

இவை உள்பட மேலும் பல்வேறு அம்சங்கள் லோக் ஆயுக்தாவில் இடம்பெற்றுள்ளது. பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

லோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் ஐகோர்ட் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார். மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  ‘முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வருவார்கள். எத்தகைய பதவியில் இருந்தாலும் யாரிடமும் அனுமதி பெறாமல் விசாரிக்கப்படுவார்கள். எவராயினும் சட்டத்துக்கு முன் சமம். லோக் ஆயுக்தாவின் தலைவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார்.

அமைச்சரின் பதிலை ஏற்காத திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து, சபாநாயகர் மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். 

Next Story