லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் பணி என்ன?


லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் பணி என்ன?
x
தினத்தந்தி 9 July 2018 10:30 PM GMT (Updated: 9 July 2018 7:10 PM GMT)

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தெரிவுக்குழு அமைக்கப்படும்.

லோக் ஆயுக்தா அமைப்பு மற்றும் அதன் பணி என்ன? 

* லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தெரிவுக்குழு அமைக்கப்படும். தெரிவுக் குழு தலைவராக முதல்–அமைச்சரும், உறுப்பினர்களாக சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இருப்பார்கள். அந்த தெரிவுக் குழுவுக்கு பெயர் பட்டியலை தயாரித்து வழங்க 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தெரிவுக்குழு தேர்ந்தெடுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

* லோக் ஆயுக்தா அமைப்புக்கு நீதிபதியோ, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிர்வாகத்தில், விழிப்புணர்வில், நிதியில், சட்டத்தில் 25 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவரோ தலைவராக நியமிக்கப்படுவார். ஏனைய 4 உறுப்பினர்களில் 2 பேர் நீதித்துறையை சார்ந்தவராக இருப்பார்கள். மீதமுள்ள 2 பேர் ஊழல் தடுப்பு உள்ளிட்ட கொள்கையில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்கும்போது அவர்களின் வயது 45–க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

* மேலும், அரசின் துணை செயலாளர் நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தா அமைப்பின் செயலாளராக நியமிக்கப்படுவார். அவரை அமைப்பின் தலைவர் தேர்வு செய்வார்.

* எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், ஊராட்சி – நகராட்சி உறுப்பினர்கள், மத்திய – மாநில பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தேர்ந்தெடுக்க முடியாது.

* லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது. இதில், எது முதலில் வருகிறதோ அதுவரை பொறுப்பில் இருப்பார்கள்.

* லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும், உறுப்பினர்களுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் படித்தொகையும் வழங்கப்படும். இதற்கான நிதியை மாநில அரசு வழங்கும்.

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக் ஆயுக்தா இயங்கும். அதன் அதிகார வரம்புக்குள் முதல்–அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் வருவார்கள்.

* குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்குள் அது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட வேண்டும்.

* அளிக்கப்படும் புகார்கள் மீது, புகார் பெறப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

* பொய் புகார் அளித்தது நிரூபிக்கப்பட்டால், புகார் அளித்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

Next Story