டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு அபாயம்


டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 9 July 2018 9:45 PM GMT (Updated: 9 July 2018 8:33 PM GMT)

அத்திப்பட்டு புதுநகரில், லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர், 

அத்திப்பட்டு புதுநகரில், லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் உள்ளன.

இங்கிருந்து தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்துதான் டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள், லாரி வாடகையை உயர்த்தி தரவேண்டும் என்று ஒப்பந்த நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது 1 கிலோ மீட்டருக்கு ரூ.2.11 கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை ரூ.2.70 ஆக உயர்த்தி தரவேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

ஆனால் இதுபற்றி ஒப்பந்த நிறுவனங்கள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இதையடுத்து வருகிற 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருந்தனர்.

இதற்கிடையே லாரி வாடகையை உயர்த்தி தரக்கோரி நேற்று காலை திடீரென டேங்கர் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்வது முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அவர்கள் தங்களது லாரிகளை குடோன் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. இதற்காக பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.

அந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டால் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் தொடரும் பட்சத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து சென்னை பெட்ரோலியம் டேங்கர் லாரி அசோசியேஷன் தலைவர் வரதராஜ் கூறியதாவது:-

டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் டேங்கர் லாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஒப்பந்த நிறுவனங்களிடம் தெரிவித்து வாடகையை உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளோம். லாரி வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்கும் வரை எங்களது வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டேங்கர் லாரி உரிமையாளர் போராட்டத்தையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story