லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது, கண்துடைப்பு நாடகம் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் கருத்து


லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது, கண்துடைப்பு நாடகம் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் கருத்து
x
தினத்தந்தி 9 July 2018 10:15 PM GMT (Updated: 9 July 2018 9:07 PM GMT)

லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது என்றும், அது கண்துடைப்பு நாடகம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை அமைச்சர் நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்டம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியதாவது:-

லோக் ஆயுக்தா சட்டம் சட்டசபையில் விவாதமே இல்லாமல் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஒரு தலைவர், 4 உறுப்பினர்கள் இருப்பார்கள். 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சார்ந்தவர்கள், 2 உறுப்பினர்கள் நீதித்துறையை சாராதவர்கள். தலைவராக இருப்பவர் ஐகோர்ட்டு நீதிபதியாக அல்லது ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதாவது 25 ஆண்டுகள் ஊழலுக்கு எதிராக செயலாற்றியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. யார் செயலாற்றியவர்கள்? என்ற கேள்வி எழுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை இந்த தலைவர் பதவிக்கு நியமிக்கலாம்.

தேர்வு செய்யும் குழுவில் 3-ல் 2 பங்கு என்ற பெரும்பான்மை அடிப்படையில் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆகியோரின் விருப்பத்தின் பேரில் இந்த தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்குழுவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அல்லது பணியில் இருக்கும் நீதிபதி இடம் பெறவில்லை.

மேலும், ஒப்பந்த பணி தொடர்பாக ஊழல் புகார் கொடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. ஊழலே ஒப்பந்த பணியில் தானே நடக்கிறது. அது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்றால், எது சம்பந்தமாக புகார் கொடுக்க வேண்டும்?

பொய் புகார் என்று தெரிய வந்தால், சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என்று சட்டம் கூறுகிறது. எனவே, இந்த சட்டம் ஊழலை ஒழிக்காது. லஞ்ச ஒழிப்புத்துறை போல கூடுதலாக ஒரு துறையாக இந்த லோக் ஆயுக்தா செயல்படும் என்று தான் கூறவேண்டும்.

மேலும், எல்லா மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கு நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்கள் மாநிலத்திலும், லோக் ஆயுக்தா அமைத்து விட்டோம் என்று கூறுவதாக, இப்படி ஒரு அவசர நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சட்டம் குறித்து பெண் வக்கீல் ஆர்.சுதா கூறியதாவது:-

நாட்டில் ஊழல் என்ற பேயை முற்றிலுமாக அழிக்கவேண்டும் என்பதற்காக மாநில அளவில் லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஊழல் ஒழிந்தால் தான், மக்களுக்கு நல்ல தரமான இலவச கல்வி, குடிநீர், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் தங்கு தடையின்றி கிடைக்கும். இந்த நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை பார்க்கும்போது, அந்த சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிர்மாறாக உள்ளது. பொய் புகார் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஓர் ஆண்டு சிறை என்று கூறியுள்ளது.

அப்படி என்றால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார் சொன்னால், அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும். பெரும் தொகையான ரூ.1 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பொதுமக்களை மிரட்டும் விதமாக உள்ளது.

இந்த லோக் ஆயுக்தா சட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை. அவர்களே உருவாக்கிக்கொண்டனர். மொத்தத்தில் இந்த லோக் ஆயுக்தா சட்டம் பொதுமக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்றுவதற்காக அரசு செய்யும் கண்துடைப்பு நாடகம் ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story