டேங்கர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்


டேங்கர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2018 1:56 AM GMT (Updated: 10 July 2018 1:56 AM GMT)

டேங்கர் லாரி உரிமையாளர்கள் லாரி வாடகையை உயர்த்தி தர கோரி தொடர்ந்து 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் உள்ளன.

இங்கிருந்து தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்துதான் டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் டேங்கர் லாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என கூறி டேங்கர் லாரி உரிமையாளர்கள் லாரி வாடகையை உயர்த்தி தர கோரினர்.

ஆனால், இதுபற்றி ஒப்பந்த நிறுவனங்கள் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இதையடுத்து வருகிற 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில், டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள், லாரி வாடகையை உயர்த்தி தர கோரி திடீரென்று நேற்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இந்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.  இதனை அடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு செல்லும் லாரிகள் இயங்கவில்லை.  இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

Next Story