என்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்


என்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
x
தினத்தந்தி 11 July 2018 12:51 AM GMT (Updated: 11 July 2018 12:51 AM GMT)

என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கப்படும் தேதி குறித்து 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

சென்னை,

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் 3 விதமான சிறப்பு கலந்தாய்வும் நிறைவு பெற்றுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்கில் 117 இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 76 இடங்கள் காலியாக இருக்கிறது. 230 பேருக்கு மட்டுமே அழைப்பாணை விடுக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும். விளையாட்டு பிரிவு 282 பேர் அழைக்கப்பட்டு, அதில் 213 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களும் கூடிய விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கவுன்சிலிங் காரணமாக, கல்லூரியை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அந்த வழக்கு வருகிற 13-ந்தேதி வருகிறது. எனவே உரிய உத்தரவை பெற்று, மாணவர்களின் கல்வியும் பாதிக்காத அளவு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பழகனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- என்ஜினீயரிங் கவுன்சிலிங் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- 13-ந்தேதி வழக்கு வரட்டும். அதன்பிறகு என்ஜினீயரிங் கவுன்சிலிங் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

கேள்வி:- மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை என்ன?

பதில்:- என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பொறியியல் படிப்புக்காக அனுமதி பெற்ற 509 கல்லூரிகள். அதன் அடிப்படையில் 1,78,139 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை விவரம் தற்போது இல்லை.

கேள்வி:- என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?

பதில்:- அந்தந்த சூழ்நிலையில் பொறியியல், கலை பாடம் என்று ஆர்வம் காணப்படும். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் அதிகமானதே தவிர மாணவர் சேர்க்கை குறையவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகம்தான்.

கேள்வி:- மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக என்ன திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது?

பதில்:- சீமன்ஸ் கம்பெனியுடன் அரசு தொழிலாளர் நலத்துறை இணைந்து ரூ.546.84 கோடியில், 6 கல்லூரிகளில் தொழில் கட்டமைப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அப்பணிகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. இதில் அரசு சார்பில் ரூ.54.68 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் எல்லா முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

கேள்வி:- பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் டெபாசிட் தொகை செலுத்தப்படுவது கிடையாதே?

பதில்:- அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், அதிகாரி சந்தானம் குழுவின் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லையே?

பதில்:- நிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார். 

Next Story