நடிகர் சிம்பு கேள்வி எழுப்பிய விவகாரம்: நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் விவாதிக்க தயார் அன்புமணி ராமதாஸ்
கடந்த 2015–ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாக அவர் மீது சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
சென்னை,
கடந்த 2015–ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாக அவர் மீது சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் மாவட்ட செசன்சு கோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் உத்தரவாத பத்திரம் அளிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து உத்தரவாதம் பத்திரம் அளிப்பதற்காக அன்புமணி ராமதாஸ் நேற்று மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவர், நீதிபதி சுபாதேவியிடம் உத்தரவாத பத்திரத்தை அளித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 10–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதன்பின்பு கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அவர், ‘தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யக்கூடாது. ‘சர்கார்’ பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு நல்லது தான் கூறினேன். விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். சிம்புவின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இதுதொடர்பாக விவாதிக்க நடிகர் சங்கம் ஏற்பாடு செய்தால் அதில் பங்கேற்று விவாதிக்க தயாராக இருக்கிறேன்’ என்று நிருபர்களிடம் கூறினார். அப்போது, ஐகோர்ட்டு வக்கீல் பாலு உடன் இருந்தார்.
Related Tags :
Next Story