சென்னையில் சீர்மிகு சட்ட கல்லூரியில் சேர கலந்தாய்வு அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
சென்னையில் சீர்மிகு சட்ட கல்லூரியில் 5 வருட சட்டப்படிப்பில் சேர கலந்தாய்வை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.
சென்னை,
2018-19-ம் ஆண்டு சீர்மிகு சட்ட கல்லூரியில் 5 வருட பி.ஏ. எல்.எல்.பி., பி.காம். எல்.எல்.பி. , பி.பி.ஏ. எல்.எல்.பி. ஆகிய ஆனர்ஸ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு மொத்தம் 2 ஆயிரத்து 790 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் தரவரிசைப்பட்டியலும் வெளியிடப்பட்டது.
கலந்தாய்வு நேற்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிப்பதற்கான ஆணையை வழங்கினார்.
துணைவேந்தர் சூரியநாராயண சாஸ்திரி, சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார், மாணவர் சேர்க்கை செயலாளர் நாராயணபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்றும்(வியாழக்கிழமை) கலந்தாய்வு நடக்கிறது.
பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
624 இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளது.
நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் நகல் வந்ததும், சி.பி.எஸ்.இ. எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து, அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story