லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை மு.க.ஸ்டாலின் பார்த்தார்
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் லண்டன் சென்றுள்ளார்.
லண்டன்,
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தனது மனைவி துர்காவுடன் நேற்று நேரில் கண்டுகளித்தார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘ எனக்கு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சென்னையை சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜை சந்தித்தேன் என்று படத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு ‘டுவிட்டர்’ பதிவில் வெளியிட்ட கருத்து வருமாறு:–
2018–ம் ஆண்டு தொழில் தொடங்குவதற்கு எளிமையான நடைமுறைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் அ.தி.மு.க அரசின் மோசமான செயல்பாடுகளால் தமிழகம் பின் தங்கியிருக்கிறது. இதன்மூலம், எத்தனை தொழில் நிறுவனங்கள் அ.தி.மு.க ஆட்சியில் மோசமான சூழலை சந்தித்து இருக்கிறது என்பது தெளிவாகிறது.
அ.தி.மு.க. அரசின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஏற்பட்ட தோல்விக்கு இதுவே சான்று.
மத்திய அரசின் ஏஜெண்டுகளையும் குறிப்பாக வருமான வரித்துறையை கொண்டும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையும், எதிர்க்கட்சிகளையும் திட்டமிட்டு தவறாக பயன்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. இது உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக அமைகிறது.
சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.