மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது


மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2018 10:04 PM GMT (Updated: 12 July 2018 10:04 PM GMT)

மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மதுராந்தகம், 

மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 60). இவர் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவு இவரை மர்மநபர்கள் சிலர் காரில் கடத்தி சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் மேல்மருவத்தூர் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 1-ந்தேதி கடத்தல்காரர்கள் முத்துகுமாரை இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டனர். ரூ.10 லட்சம் கொடுத்து தொழில் அதிபர் முத்துகுமாரை கடத்தல்காரர்களிடம் இருந்து அவரது உறவினர்கள் மீட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை தேடி வந்தனர். மேலும் முத்துகுமாரிடம், கடத்தல்காரர்கள் பற்றிய அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர்.

இந்தநிலையில் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் கூட்டுசாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் மறித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், ஆரம்பாக்கம் அடுத்த படப்பையை சேர்ந்த சதீஷ் (28) மற்றும் சென்னை கோட்டூர் பகுதியை சேர்ந்த கங்காதேவி (50), அவரது மருமகள்கள் விக்டோரியா (29), சரண்யா (25) என்பதும், இவர்கள் தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான சதீஷ் மதுராந்தகம் சிறையிலும், மற்ற 3 பேரும் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தலைமறைவான ஞானசேகர் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இவர் தான் 10 பேருடன் சேர்ந்து தொழில் அதிபரை கடத்தி பணம் பறித்துள்ளார். இவரை பிடித்தால் தான் முக்கிய தகவல்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டு உள்ள கங்காதேவி ஞானசேகரின் தாயார் ஆவார். விக்டோரியாவும், சரண்யாவும் ஞானசேகரின் மனைவிகள்.

Next Story