இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீண்டும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் 2 ஆண்டு வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என கோர்ட்டு கூறியது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 6-ந் தேதி 12 மீனவர்கள் 2 படகுகளிலும், மண்டபம் மீனவர்கள் 4 பேர் ஒரு படகிலும் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர்.
ஆனால் அவர்கள் எல்லை தாண்டி தங்கள் நாட்டின் கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களின் படகுகளையும் கைப்பற்றி தங்கள் காவலில் வைத்துக்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இதற்கு இடையே கடந்த 11-ந் தேதி ராமேசுவரம் மீனவர் சங்க குழுவினர் போஸ், என்.தேவதாஸ், எம்.எஸ்.அருள், தட்சிணாமூர்த்தி, பசுமலை, தங்கராஜ் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் அவர்களுடன் பிடிபட்ட படகுகளை விடுவிக்க அவர் மறுத்து விட்டார். அந்த படகுகளின் உரிமையாளர்கள் வருகிற 28-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளனர்.
இதுகுறித்து மீனவர் சங்க தலைவர் என்.தேவதாஸ் கூறியதாவது:-
யாழ்ப்பாணம் கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டு உள்ள மீனவர்கள், 5 ஆண்டுக்குள் மீண்டும் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்து, அந்த நாட்டின் கடற்படையினர் பிடியில் சிக்கினால் அவர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
இலங்கை அரசு தற்போது மீனவர்களின் மீது கடுமையான சட்டத்தை பாய்ச்ச உள்ளது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story