நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை


நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 13 July 2018 11:53 PM GMT (Updated: 13 July 2018 11:53 PM GMT)

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை,

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை டி.வி.எஸ்.நகர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 37), மினி லாரி டிரைவர். இவருடைய மனைவி மைக்கேல்ஜீவா(36). தனியார் பள்ளியில் இருவரும் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஹரிதா (4), ஹரிகிஷோர்குமார்(3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த சில நாட்களாக மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக ராஜா சந்தேகப்பட்டார்.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதனால் மனவருத்தம் அடைந்த மைக்கேல்ஜீவா தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார். அந்த நேரத்தில் ராஜா இரவு வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் அவர் வேலை முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. எனவே கதவை உடைத்து உள்ளே அவர் சென்று பார்த்தபோது, மைக்கேல்ஜீவா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். மேலும் 2 குழந்தைகளும் பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நிலையில் இறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி இரு குழந்தைகளையும் கொன்று விட்டு மைக்கேல்ஜீவா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு ராஜா தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்கள் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மைக்கேல்ஜீவா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது, மைக்கேல்ஜீவா எழுதிய உருக்கமான 2 கடிதங்கள் சிக்கின. அதில் “நான் போடும் உயிர் பிச்சை. நான் யார் பெயரையும் எழுதப் போவதில்லை. எனக்கு செய்த துரோகத்திற்கு நீ அனுபவிப்பாய். அதை நான் பார்க்கத் தான் போகிறேன். என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கிறாய். என்னையும், எனது குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன். என் குழந்தைகளின் பிறந்த நாள் 22.7.2018. ஆனால் உனக்கோ. இதுக்கெல்லாம் நீயும் சரி. உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க. எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. இதுக்கு எல்லாம் என்னையும், என் குழந்தைகளை கேவலப்படுத்தியதற்கு அனுபவிப்பீங்க” என்று எழுதியிருந்தார்.

மற்றொரு கடிதத்தில் “ராணி அக்கா, தீபாவிற்கு நான் தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை மன்னிச்சிடுங்க. அம்மாவை பார்த்துக் கொள்ளுங்கள். சைபின், தீபா மகன், மகள் ரியானா, ஆண்டனி தான் கண்ணுக்குள் இருக்காங்க. எங்களை அனாதை போல் எரித்து விடவும். என கணவர் கொள்ளி போடக்கூடாது” என்று எழுதி இருந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story