ஆவணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் காரணம் காட்டி மகப்பேறு நிதி உதவியை நிறுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


ஆவணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் காரணம் காட்டி மகப்பேறு நிதி உதவியை நிறுத்தக்கூடாது டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 13 July 2018 11:59 PM GMT (Updated: 13 July 2018 11:59 PM GMT)

ஆவணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் காரணம் காட்டி மகப்பேறு நிதியுதவியை எந்த வகையிலும் நிறுத்தக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழும் கருவுற்ற பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை பெறுவதற்காக விண்ணப்பித்த ஏழைப் பெண்கள், அதற்கான ஆதாரங்களை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழக அரசின் இந்த முடிவால் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

கடந்த ஆண்டு வரை மகப்பேறு உதவித் திட்டத்திற்கான ஆவணங்களை வழங்க எல்லையில்லாத கால அவகாசம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.18 ஆயிரம் உதவித் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட இருப்பதால் இருவகையான பயனாளிகளுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்தக் கெடுபிடி காட்டப்படுகிறது. இது முற்றிலும் தேவையற்றது.

தமிழ்நாடு முழுவதும் 8706 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திலும் சராசரியாக 4 பேர் வீதம் மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்படுவர். மகப்பேற்றின்போது தாய்-சேய் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

35 ஆயிரம் பேருக்கு இந்த உதவி வழங்கப்படவில்லை என்றால் அது தாய்-சேய் இறப்பு விகிதத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக விண்ணப்பித்தவர்கள் அதற்கான சான்றுகளை வரும் டிசம்பர் வரை தாக்கல் செய்யலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும். ஆவணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் காரணம் காட்டி மகப்பேறு நிதியுதவியை எந்த வகையிலும் நிறுத்தக்கூடாது.

அத்துடன் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வசதியாக, காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story