சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி


சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காத பாச தம்பதி
x
தினத்தந்தி 14 July 2018 10:30 PM GMT (Updated: 14 July 2018 10:16 PM GMT)

சத்தியமங்கலம் அருகே சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்ட தம்பதி, ‘குஞ்சுகள் பறந்துசெல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் காத்திருப்போம்’ என்றனர்.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35), லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சவீதா (32). ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவிட்டு தற்போது வீட்டை கவனித்து வருகிறார். இவர்களுக்கு ஓம்ஸ்ரீமன் (7) என்ற ஒரு மகன் உள்ளான். சவீதா ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார்.

கடந்த மாதம் 27-ந் தேதி ஸ்கூட்டரை வீட்டுக்குள் நிறுத்திவிட்டு மகேந்திரன் குடும்பத்துடன் காரில் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

உறவினர் வீட்டில் இருந்து 29-ந் தேதி வீட்டுக்கு திரும்பினார்கள். காரில் இருந்து இறங்கியதும் சவீதா ஸ்கூட்டரை எடுக்க சென்றார். அப்போது வண்டியின் முன்பகுதியில் பொருட்கள் வைக்கும் பொந்துபோன்ற இடத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. உடனே தன்னுடைய கணவரையும், மகனையும் அழைத்து அதை காண்பித்தார். மகிழ்ச்சி அடைந்த 3 பேரும் கூட்டை கலைக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ஸ்கூட்டரை அசைக்காமல் அதே இடத்தில் விட்டுவிட்டார்கள்.

இதற்கிடையே 2 நாட்கள் கழித்து சவீதா கூட்டை பார்த்தபோது, குருவி எங்கோ இரைதேட சென்றிருந்தது. ஆனால் கூட்டுக்குள் 3 முட்டைகள் இருந்தன. இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த சவீதா ஸ்கூட்டரை சிறிது கூட அசைக்காமல் பார்த்துக்கொண்டார். நாள்தோறும் குருவி வருவதும், கூட்டில் முட்டையை அடை காப்பதுமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகான 3 குஞ்சுகளை தாய் குருவி பொரித்தது.

தாய் குருவியையும், குஞ்சு களையும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்த சவீதா குடும்பத்தார். ‘குஞ்சுகள் பெரியதாகி தாய் குருவி அவைகளை அழைத்துக்கொண்டு பறந்து செல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவோம்’ என்றார்கள்.

இதற்கிடையே தாய் குருவி இரையுடன் வந்து, தன்னுடைய அலகில் இருந்து குஞ்சுகளின் வாயில் ஊட்டுகிறது. அப்போது மற்றொரு குருவியும் உடன் வருகிறது. அது தந்தை குருவியாக இருக்கலாம். இந்த காட்சிகளை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து செல்கிறார்கள்.

Next Story