ஆட்டோவில் சென்றபோது பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை ஒருதலையாக காதலித்தவர் வெறிச்செயல்


ஆட்டோவில் சென்றபோது பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை ஒருதலையாக காதலித்தவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 20 July 2018 12:10 AM GMT (Updated: 20 July 2018 12:10 AM GMT)

பழனியில் ஆட்டோவில் சென்ற பள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை செய்யப்பட்டார். ஒருதலையாக காதலித்த பெரியம்மா மகன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி. இவருடைய மகள் பவித்ரா (வயது 24). பி.ஏ. படித்துள்ள பவித்ரா பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.

இவருக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணி அளவில் வாலிபர் ஒருவருடன் ஆட்டோவில் சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றார். அவரை ஆட்டோ டிரைவர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மேல்சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் நள்ளிரவு 1 மணி அளவில் இறந்தார்.

தங்கையை காதலித்தார்....

இந்த சம்பவம் குறித்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளியான மாயவன் (26) என்பவர் பவித்ராவுடன் நேற்று முன்தினம் இரவு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

அதன்பின்னரே பவித்ராவை பிளேடால் கழுத்து அறுத்து கொன்றது மாயவன் தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாயவன் பவித்ராவுக்கு அண்ணன் உறவுமுறை கொண்டவர் ஆவார். அவர் பவித்ராவின் பெரியம்மா மகன் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக அவர் பவித்ராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் பவித்ராவிடம் அவர் அதுகுறித்து தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையறிந்த மாயவன் பவித்ராவிடம் தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் அவரை தனிமையில் சந்தித்த மாயவன், தனது காதலை பவித்ராவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை பவித்ரா ஏற்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக கூறி பவித்ராவை ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மாயவன் பவித்ராவின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார், என்றனர்.

இதற்கிடையே நேற்று பொள்ளாச்சி செல்வதற்காக பழனி பஸ் நிலையம் வந்த மாயவனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

Next Story