அ.தி.மு.க. அரசை கலைக்கும் முயற்சியா? தொல்.திருமாவளவன் கேள்வி


அ.தி.மு.க. அரசை கலைக்கும் முயற்சியா? தொல்.திருமாவளவன் கேள்வி
x
தினத்தந்தி 20 July 2018 10:15 PM GMT (Updated: 20 July 2018 9:10 PM GMT)

அ.தி.மு.க. அரசை கலைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறதா? என தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம்,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசுக்கு கண்டனம்

அப்போது அவர்கள் விவசாயத்தை அழித்து செயல்படுத்தப்படும் பசுமைச்சாலை திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, முதன்மை செயலாளர் பாவரசு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்ற தொல்.திருமாவளவன் சேலம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கட்சிகளுக்கு அச்சுறுத்தல்

வருமான வரி சோதனை மூலம் மத்திய அரசு தங்களை எதிர்க்கும் கட்சிகளை அச்சுறுத்தி வருகிறது. திடீரென முதல்-அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் இல்லம், அலுவலகங்களில் சோதனை நடத்தியது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

அது முதல்-அமைச்சரை மாற்றும் செயலா? அல்லது அ.தி.மு.க.அரசை கலைக்கும் முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜனதா தமிழகத்தில் குழப்பம் செய்து அரசியல் ஆதாயம் தேடுகிறதோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story