நாடு முழுவதும் வேலைநிறுத்தம் தொடங்கியது தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை


நாடு முழுவதும் வேலைநிறுத்தம் தொடங்கியது தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 21 July 2018 12:00 AM GMT (Updated: 21 July 2018 1:55 AM GMT)

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது. தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

பின்னர் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்காத அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இதே கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தரப்பில் 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை லாரி உரிமையாளர்கள் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே திட்டமிட்டபடி நாடு முழுவதும் நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என்று தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்தார்.

அதன்படி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம்வகிக்கும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தனராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்படும். வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, பருப்பு வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டுவருவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்.

தற்போது பொருட்களை ஏற்றிச்சென்ற லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே இன்னும் 2 தினங்களில் போராட்டம் தீவிரமடையும். அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை, சுங்கக்கட்டணம், காப்பீடு கட்டண உயர்வு எங்களை மட்டுமல்ல பொதுமக்களையும் பாதிக்க கூடியவை தான். எனவே நாங்கள் மக்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம். ஆகவே மக்கள் சிரமத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.யுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 55 ஆயிரம் மணல் லாரிகள் உள்ளன. மணல் குவாரிகள் பிரச்சினை, மணல் தட்டுப்பாடு போன்றவற்றால் ஏற்கனவே பெரும்பாலான லாரிகள் இயக்கப்படாமல் தான் இருந்துவந்தது. தற்போது வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை.

திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 6 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. சென்னையை பொறுத்தவரையில் மணல் லாரிகள் எண்ணிக்கை குறைவு தான். எங்களுடைய வேலைநிறுத்தத்தால் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாரிகள் வேலைநிறுத்தத்தையடுத்து மாதவரம் பகுதியில் பெரும்பாலான லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. எனினும் மாதவரம் பகுதியில் ஒருசில லாரிகள் வழக்கம்போல் சென்றதையும் காணமுடிந்தது. 

Next Story