மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தது இன்று கல்லணை திறப்பு


மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தது இன்று கல்லணை திறப்பு
x
தினத்தந்தி 21 July 2018 11:00 PM GMT (Updated: 21 July 2018 8:04 PM GMT)

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தடைந்தது. இன்று கல்லணை திறக்கப்படுகிறது.

திருச்சி,

நீர்மட்டம் 100 அடிக்கு மேல் தாண்டியதால் காவிரி டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது. அணைக்கு வினாடிக்கு 64 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் நள்ளிரவு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்தது. மாயனூர் கதவணையில் இருந்து 19 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று இரவு 8.15 மணி அளவில் காவிரி தண்ணீர், திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலையில் உள்ள வாத்தலை அணையை வந்தடைந்தது. பின்னர் முக்கொம்பு அணையை சென்றடைந்த அந்த தண்ணீர், வேகமாக பாய்ந்தோடி நள்ளிரவில் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணை நோக்கி காவிரி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று கல்லணை திறப்பு

முன்னதாக காவிரி நீர் வருவதையொட்டி, முக்கொம்பு மேலணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிவீதம் திறக்கப்பட்டது. முக்கொம்பில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். அந்த தண்ணீர் நேற்று காலை 9 மணிக்கு திருச்சி சிந்தாமணியை தாண்டி தஞ்சை மாவட்டம் கல்லணை நோக்கி சென்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முக்கொம்பில் தேக்கப்பட்ட தண்ணீருடன் சேர்ந்து, காவிரி தண்ணீரும் கல்லணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகி றது. எனவே, கல்லணையை இன்று மதியம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

Next Story