நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் உள்பட 88 பேர் கைது


நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் உள்பட 88 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 9:30 PM GMT (Updated: 2 Aug 2018 10:11 PM GMT)

8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி நள்ளிரவில் நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

சென்னை - சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை 170 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் போலீசாரின் தடையை மீறி நடைபயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து பாலகிருஷ்ணன் உள்பட 395 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர். அப்போது மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் மீண்டும் நடைபயணத்தை தொடங்கினர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதனையடுத்து போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணன் உள்பட 88 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story