கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை: கள்ளக்காதலி சவுந்தர்யா கைது பரபரப்பு வாக்குமூலம்


கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை: கள்ளக்காதலி சவுந்தர்யா கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Aug 2018 9:45 PM GMT (Updated: 2 Aug 2018 9:45 PM GMT)

புதுக்கோட்டை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொலை வழக்கில் கள்ளக்காதலி சவுந்தர்யா கைது செய்யப்பட்டார். கொலை குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கீரனூர், 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) பணியாற்றி வந்தவர் திருச்சியை சேர்ந்த பூபதிகண்ணன் (வயது 45).

கடந்த 28-ந்தேதி காலை பூபதிகண்ணன், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் அவரது காருக்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை நடந்ததற்கு முந்தைய நாள், தன்னுடன் டைப்பிஸ்டாக வேலைபார்க்கும் திருச்சியை சேர்ந்த சவுந்தர்யா என்பவருடன் பூபதிகண்ணன் காரில் சென்றது நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.

அதைத்தொடர்ந்து சவுந்தர்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பூபதிகண்ணனுடன் காரில் சென்றதையும், அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததையும், கொலை நடந்த அன்று இருவரும் காட்டுப்பகுதியில் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது வந்த மர்ம நபர் பூபதிகண்ணனை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்து விட்டு சென்றதாகவும், தான் தப்பித்து ஓடிவந்துவிட்டதாகவும் கூறினார்.

கடந்த 5 நாட்கள் போலீசார் சவுந்தர்யாவிடம் விசாரணை நடத்தியபோதிலும் கொலைக்கான காரணம் தெரியாது என்று மறுத்தே வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சவுந்தர்யா கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பூபதிகண்ணன் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து கைதான சவுந்தர்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஒரே அலுவலகத்தில் வேலை என்பதாலும், பூபதிகண்ணன் உயர் அதிகாரி என்பதாலும் அவரின் நட்பு எனக்கு கிடைத்தது. குடும்ப சூழ்நிலையை சொல்லி பல லட்ச ரூபாய் அவரிடம் பெற்றுள்ளேன். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

தினமும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு அவர் காரில் செல்வது வழக்கம். பணிமுடிந்து ஊர் திரும்பும் வேளையில் தேவைப்படும்போது, மாத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு காரில் செல்வோம். அங்கு காரிலேயே இருவரும் உல்லாசம் அனுபவிப்போம்.

கடந்த 27-ந்தேதி மாலை பணிமுடிந்து காரில் திரும்பியபோது மாத்தூர் காட்டுப்பகுதியில் காரில் வைத்து உல்லாசம் அனுபவித்தோம். பின்னர் பூபதிகண்ணன் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கி சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அலறியபடி ரத்தம் சொட்ட சொட்ட ஓடிவந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து கையில் கத்தியுடன் வந்த நபர், கத்தியை என் கையில் கொடுத்து, நீயும் 2 குத்து கத்தியால் பூபதிகண்ணனை குத்து என்று மிரட்டினான். வேறுவழியின்றி நானும் கத்தியால் அவரை குத்தினேன்.

அதன்பின்னர் கத்தியை கையில் வாங்கிய மர்மநபர் மீண்டும் அவரை கத்தியால் குத்தினான். பூபதி கண்ணன் கார் அருகிலேயே சரிந்து விழுந்து விட்டார். நான், அவர் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். கொலைகார ஆசாமி யார் என்றே எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த பதற்றத்தில் காரில் கழற்றிப்போட்ட உள்ளாடையை சவுந்தர்யா எடுக்க மறந்து, அதை காரிலேயே விட்டு சென்று விட்டார். போலீசார் காரில் கிடந்த உள்ளாடையை வைத்துதான் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தபோதுதான் கொலை நடந்துள்ளது என்பதை உறுதி செய்ய முடிந்தது.

கொலையுண்ட பூபதிகண்ணனின் கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்துச்சென்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ள சவுந்தர்யா, உள்ளாடையை எப்படி மறந்தார் என்பதுதான் புதிராக உள்ளது.

Next Story