கடன்தொல்லையால் விபரீத முடிவு 2 குழந்தைகளை கொன்று தாயுடன் விவசாயி தற்கொலை


கடன்தொல்லையால் விபரீத முடிவு 2 குழந்தைகளை கொன்று தாயுடன் விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2018 9:18 PM GMT (Updated: 5 Aug 2018 9:18 PM GMT)

கடன் தொல்லையால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு விவசாயி தனது தாயாருடன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வண்ணாபட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 38) விவசாயி. இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு ராஜலட்சுமி (11) என்ற மகளும், மாணிக்கசத்தியமூர்த்தி (4) என்ற மகனும் இருந்தனர். இவர்களுடன் முத்துசாமியின் தாயார் மயிலாத்தாள் (70) வசித்து வந்தார்.

முத்துச்சாமி ஒருவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்தார். மகள் ராஜலட்சுமி ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் வறட்சி காரணமாக விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தான் வளர்த்து வந்த ஆடு, மாடுகள், கோழிகள் ஆகியவற்றை முத்துச்சாமி விற்றுவிட்டார்.

மேலும் குத்தகைக்கு எடுத்த தோட்டத்துக்கு உரிய பணத்தை கொடுக்க முடியாமலும், குடும்பத்தை பராமரிக்க முடியாமலும் அவர் பெரிதும் சிரமப்பட்டார். இதன் காரணமாக பலரிடம் வாங்கிய கடனையும் முறையாக திருப்பிக்கொடுக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தகராறு ஏற்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்து பெண் ஊழியர் ராமாத்தாள் என்பவர் முத்துச்சாமி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்கு அருகில் இருந்த வேப்பமரத்தில் முத்துச்சாமியும், அவரது தாயார் மயிலாத்தாளும் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் பூட்டி கிடந்த முத்துச்சாமியின் வீட்டை திறந்துபார்த்தனர். அப்போது வீட்டினுள் குழந்தைகள் ராஜலட்சுமி, மாணிக்கசத்தியமூர்த்தி ஆகியோரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் முத்துச்சாமி கடன் தொல்லையால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை வலுக்கட்டாயமாக தூக்கில் போட்டு கொன்றுவிட்டு தனது தாயாருடன் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்வி, தனது குழந்தைகள் மற்றும் கணவர், மாமியார் ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

Next Story