தந்தையின் கள்ளக்காதலியை ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்


தந்தையின் கள்ளக்காதலியை ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய மகன்
x
தினத்தந்தி 6 Aug 2018 6:10 AM GMT (Updated: 6 Aug 2018 6:10 AM GMT)

தந்தையின் கள்ளக்காதலியை ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய மகனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி (45). இவர் நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென்று அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்த முயன்றதால், அதிர்ச்சியடைந்த ரங்கநாயாகி கத்தியை தட்டிவிட்டு  அங்கிருந்து தப்பி ரோட்டில் ஓடி உள்ளார்.  இருப்பினும் விடாமல் துரத்திய அவர் ரங்கநாயகியின் கையில் குத்தினார்.

அருகில் இருந்த பயணிகள் ஓடிவந்து, அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ரங்கநாயகியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த நபர் ஸ்ரீவித்யா நகர் பகுதியை சேர்ந்த துரை- ரத்தினம் தம்பதியின் மகன் அருண் (30) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ரத்தினத்தை துரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது அருணின் தந்தையான துரைக்கும், ரங்கநாயகிக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அருண் தந்தையை கண்டித்ததாகவும், ஆனால் அவர் இதை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து ரங்கநாயகியிடம் கூறிய போது அவர் இதை கண்டுகொள்ளவில்லை என்பதால், ஆத்திரத்தில் இந்த செயலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

அருண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story