கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை - தமிழக அரசு


கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை - தமிழக அரசு
x
தினத்தந்தி 7 Aug 2018 2:49 PM GMT (Updated: 7 Aug 2018 2:49 PM GMT)

கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #DMK #ripkarunanidhi

சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. 

திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார். 

மாற்று இடம் 

இந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story