ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்


ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Aug 2018 7:13 PM GMT (Updated: 7 Aug 2018 7:42 PM GMT)

ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைக்கட்டுமா தலைவரே என எழுதி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். #Karunanidhi #RIPKarunanidhi

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம்(திங்கள் கிழமை) முதல்அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் பூத உடலுக்கு  நள்ளிரவு 1 மணி வரையிலும், சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதிகாலை  4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் மகனும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மனம் உருகி கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும்
எனது ஆருயிர்த் தலைவரே; இம்முறை
ஏன் சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில், உடலில், இரத்தத்தில்,
சிந்தனையில், இதயத்தில், இரண்டறக் கழந்துவிட்ட
தலைவா! எங்களையெல்லாம், இங்கேயே
ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ
ஓய்வு கொண்டிருக்கிறான்என்று உங்கள்
நினைவிடத்தில் எழுத வேண்டுமென்று
33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள்.
இந்தத் தமிழ் சமூகத்துக்காக
இடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன்
புறப்பட்டுவிட்டீர்களா?

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்
சளைக்காமல் ஓடி,நாம் தாண்டிய உயரத்தை
யார் தாண்டுவார்கள் பார்ப்போம் என்று போட்டி
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம்
சூன் 3ஆம் நாள் நான் பேசும் போது, உங்கள்
சக்தியில் பாதியைத் தாருங்கள் என்றேன். அந்தச் சக்தியையும்
பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன்;
தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத
உங்கள் கனவுகளையும், லட்சியங்களையும்,
வென்று காட்டுவோம்!

கோடானுகோடி உடன்பிறப்புக்கள் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்... ஒரே ஒருமுறை...

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! என்று
சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!

அப்பா, அப்பா என்பதைவிட, தலைவரே, தலைவரே
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒரு முறை, இப்போது அப்பா
என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? - கண்ணீருடன் மு.க.ஸ்டாலின்  என்று அதில் எழுதியுள்ளார்.


Next Story