தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அஞ்சலி


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அஞ்சலி
x
தினத்தந்தி 8 Aug 2018 2:12 AM GMT (Updated: 8 Aug 2018 2:12 AM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலைமை செயலகத்தில் அரைகம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு உள்ளது.

அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் 77வது ஆண்டில் முரசொலி நாளிதழ் அடியெடுத்து வைக்க உள்ளது.  இந்த நிலையில், மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் குவிந்து உள்ளனர்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, காமராஜ் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


Next Story