கருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடி


கருணாநிதியின் அடையாளமான கருப்பு கண்ணாடி
x
தினத்தந்தி 8 Aug 2018 6:22 AM GMT (Updated: 8 Aug 2018 6:22 AM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அவரது கருப்பு கண்ணாடி ஒரு அடையாளமாகவே விளங்கியது.

*  1954-ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் அவரது கண் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகுதான் அவர் பவருடன் கூடிய கருப்பு கண்ணாடி அணிய ஆரம்பித்தார்.

* 1990-களில்தான் கட்சி கரை போட்ட அங்கவஸ்திரத்தில் இருந்து மாறி மஞ்சள் நிற சால்வை போட ஆரம்பித்தார்.

* வெயில் காலம் என்றாலும், பனிக்காலம் என்றாலும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிப்பார்.

* வெள்ளை நிற செருப்பு தோல் செருப்பு அணிவதுதான் அவருக்கு பிடிக்கும். நடைபயிற்சிக்கு செல்லும் போது மட்டும் ‘கட் ஷூ’ அணிவார்.

* எழுத்துப்பணியை இரவிலேயே வைத்துக் கொள்வார். இரவில் எத்தனை மணிக்கு படுக்கைக்கு சென்றாலும், அதிகாலை 5½ மணிக்கு எழுந்துவிடுவார்.

* அண்ணா அறிவாலயம் கட்டிய பிறகு, அங்கு நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தார். உடல்நிலை நன்றாக இருக்கும் வரை காலையில் அங்கு சென்று 20 நிமிடம் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

* காலையிலேயே எல்லா தினசரி பத்திரிகைகளையும் படித்து முடித்து விடுவார். அரசியல், உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பார்.

* அம்பாசிடர் காரில் பயணம் செய்வதை விரும்புவார்.

* கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பி பார்ப்பார். இதேபோல் பழைய சினிமா படங்களையும் விரும்பி பார்ப்பார்.

* ஒரு நாளைக்கு இரு முறை துணி மாற்றுவார். தேர்தல் சமயம் மற்றும் அதிகமான வெயில் சமயங்களில் வெளியே செல்லும் போது மூன்று முறை சட்டை மாற்றுவார். இரவில் லுங்கி அணிவார். கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தையல்காரர்தான் அவருக்கு சட்டை தைத்து கொடுப்பது வழக்கம்.

* மழையை ரொம்ப பிடிக்கும். மழை பெய்யும் போது ரசித்துப் பார்ப்பார். நாய்களின் மீதும் அவருக்கு பிரியம் அதிகம். 

Next Story