ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் இறுதிபயண வாகனம் ஓட்டியது, ஒருவரே...


ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் இறுதிபயண வாகனம் ஓட்டியது, ஒருவரே...
x
தினத்தந்தி 8 Aug 2018 7:28 AM GMT (Updated: 8 Aug 2018 7:28 AM GMT)

மறைந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கும் இறுதிபயண வாகனம் ஓட்டியது ஒருவரே.

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இரவு மரணம் அடைந்தபோது, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சந்தனப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவர், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார் (வயது 58).

இவர் ‘ஹோமேஜ்’ என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரபலமான தலைவர்கள் மறையும்போது, அவர்களின் உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுவதை அவர் தனது கடமையாக கருதி செய்து வருகிறார்.

அந்த வகையில், இப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை தங்க முலாம் பூசிய குளிர்சாதன கண்ணாடிப் பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும், தொடர்ந்து ராஜாஜி ஹாலுக்கும் ஓட்டிச்சென்றவர், பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார்தான்.

புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான ‘பிளையிங் ஸ்குவேர்டு’ ஆம்புலன்ஸ் வாகனம்தான், கருணாநிதியின் உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய 2 பேரின் இறுதி பயணத்திலும் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி, பெரும் பங்காற்றி இருப்பது குறித்து சாந்தகுமார் கூறியதாவது:-

1977-ம் ஆண்டு ‘ஹோமேஜ்’ நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். முக்கிய தலைவர்கள் இறக்கும்போது நானே அமரர் ஊர்தியை இயக்குவதை என் பாக்கியமாக கருதுகிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கு நான்தான் அமரர் ஊர்தி இயக்கி இருக்கிறேன். இப்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இறுதிப்பயண ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி இருக்கிறேன்.

மாபெரும் தலைவர்கள் வாழும்போது அவர்களுடன் ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால், அவர்கள் மறைந்த பிறகு, அவர்களது உடல் அருகே இருந்து பணி செய்வதை கடவுள் எனக்கு கொடுத்த வரமாக கருதுகிறேன். தலைவர் கருணாநிதிக்கும் பக்தி கலந்த மரியாதையுடன் இதைச் செய்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story