கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து


கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 9 Aug 2018 11:30 PM GMT (Updated: 9 Aug 2018 11:01 PM GMT)

அண்ணா நினைவிடத்தில் உள்ள கருணாநிதியின் சமாதியில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

‘ஓய்வறியா சூரியன்’ என்று தி.மு.க. தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கருணாநிதி, மெரினா கடற்கரையில் அண்ணா அருகில் நீங்கா துயில் கொண்டிருக்கிறார்.

கோபாலபுரத்திலும், அண்ணா அறிவாலயத்திலும் பார்த்த தலைவனை, மீளா ஓய்வெடுக்க சென்றுள்ள தன் தலைவனை காண நேற்றும் ஏராளமான தொண்டர்கள் அண்ணா நினைவிடத்திற்கு வந்த வண்ணமாக இருந்தனர். கண்களில் கண்ணீரும், கைகளில் மாலையுமாக கூட்டம், கூட்டமாக அவர்கள் வந்த காட்சியை பார்க்க முடிந்தது.

கருணாநிதி சமாதியை சுற்றி பூக்கள் தூவப்பட்டும், அதில் உதய சூரியன் சின்னம் பூக்களால் வடிவமைக்கப்பட்டும் இருந்தது. சமாதியின் தலைப்பகுதியில் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கொடியும் சமாதியில் பறக்க விடப்பட்டு இருந்தது.

கூட்டம் கூட்டமாக வந்த தொண்டர்கள் வரிசையில் நின்று கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பெண் ஊழியர்கள் 2 பேர் தொண்டர்கள் கொடுக் கும் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை வாங்கிச்சென்று சமாதியில் வைக்கிறார்கள். சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் அதன் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். பெண் தொண்டர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகளையும் பார்க்க முடிந்தது.

கருணாநிதி சமாதிக்காக பள்ளம் தோண்டப்பட்டதால் ஆங்காங்கே மண் குவிக்கப்பட்டிருந்தது. அந்த மணல் குவியல்கள் சமதளமாக்கி சீரமைக்கப்பட்டன.

இறந்தவர்களின் சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்துவது கிராமங்களில் இன்றைக்கும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இந்த நடைமுறை பின்பற்றப்படும்.

அந்தவகையில், மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் கவிஞர் வைரமுத்து நேற்று பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். வைரமுத்துவின் மகன்கள் மதன் கார்க்கி, கபிலனும் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் சமாதியில் பூக்களை தூவி, சமாதியை சுற்றி வந்த வைரமுத்து தான் கொண்டு வந்திருந்த பாலை கருணாநிதியின் சமாதியில் ஊற்றி, அஞ்சலி செலுத்தினார். பின்னர் கண் கலங்கியபடி அங்கே அமர்ந்து விட்டார். பின்னர் நிருபர்களிடம் வைரமுத்து கூறியதாவது:-

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியை காப்பாற்றுவது தமிழ் சமுதாயத்தின் கடமை. சூரியன் இல்லாமல் விடியல் வருமா என்பதைப் போல உள்ளது கருணாநிதியின் மறைவு. மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story