கருணாநிதி சமாதியில் விடிய, விடிய கண்ணீர் அஞ்சலி அலை அலையாக தொண்டர்கள் வருகை


கருணாநிதி சமாதியில் விடிய, விடிய கண்ணீர் அஞ்சலி அலை அலையாக தொண்டர்கள் வருகை
x
தினத்தந்தி 10 Aug 2018 12:15 AM GMT (Updated: 9 Aug 2018 11:18 PM GMT)

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் தொண்டர்கள் விடிய, விடிய அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அலை அலையாக தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

சென்னை,

முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. பெரிய அளவில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, விடிய விடிய தொண்டர்கள் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று அதிகாலை முதலே கருணாநிதி சமாதிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அலை அலையாக திரண்டுவர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக வர தொடங்கியது. இதனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பிட்ட எண்ணிக்கை அடிப்படையில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.41 மணிக்கு கருணாநிதி சமாதிக்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் என ஏராளமானோர் வந்தனர். தளர்ந்த நடையுடன் வந்த மு.க.ஸ்டாலின் சமாதிக்கு முன்பு ஒரு நிமிடம் நின்றார்.

பின்னர் சமாதியை நோக்கி கைகூப்பி வணங்கினார். சமாதிக்கு மலர் மாலை அணிவித்தார். பின்னர் 3 முறை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சமாதியை சில வினாடிகள் தொட்டுக்கொண்டே இருந்தார். பின்னர் கண்ணீர் மல்க கையெடுத்து வணங்கினார். சமாதியை ஒருமுறை வலம்வந்த பின்னர் அங்கிருந்து சோகமாக காலை 11.53 மணிக்கு புறப்பட்டு சென்றார்.

எப்போதும் சுறுசுறுப்புடனும், வேக நடையுடனும் உற்சாகமாக வலம் வரும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முற்றிலும் மாறியிருந்தார். சோகத்தால் அவரது முகம் வாடியிருந்தது. முகத்தில் 2 நாள் தாடி பரவியிருந்தது. யார் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் சமாதியை சத்தமில்லாமல் கனத்த இதயத்துடன் வலம் வந்தார். மேலும் நிருபர்களுக்கு சளைக் காமல் பேட்டி தரும் மு.க.ஸ்டாலின் நேற்று பத்திரிகையாளர்கள் இருந்த திசையை கூட பார்க்கவில்லை.

மு.க.ஸ்டாலின் முகத்தில் இதுவரை சோகத்தை பார்க்காத தொண்டர்கள் அப்போது அதிர்ச்சி அடைந்தனர். சமாதியில் அஞ்சலி செலுத்தி தனது காரில் ஏறும் வரை அவரை தொடர்ந்து சென்று, ‘கலங்காதே தலைவா... நாங்கள் இருக்கிறோம்’, என்று தொண்டர்கள் குரல் எழுப்பி வழியனுப்பினர்.

கருணாநிதி சமாதிக்கு திரண்டு வந்த பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். கைக்குழந்தைகளுடனும் பெண்கள் காத்திருந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தி சென்றனர்.

சில பெண்கள் சமாதி முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர். கண்களில் கண்ணீருடன் ஏராளமானோர் காணப்பட்டனர். சிலர் துக்கம் தாங்காமல் அழுதனர். தி.மு.க. தொண்டர்கள் சிலர் சமாதிக்கு அருகே மொட்டை அடித்து கொண்டனர். பின்னர் சமாதிக்கு வந்து, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கருணாநிதி சமாதிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். வயது முதிர்ந்தவர்கள் கருணாநிதி படத்தை கையில் ஏந்தியவாறு அஞ்சலி செலுத்தி சென்றனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், பேராயர் எஸ்றா சற்குணம், தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உள்பட பலரும் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி சமாதி உள்ள இடத்தில் கூடாரம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கூட்டத்தால் நேற்று அண்ணா நினைவிட வளாகம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர். தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போலீசார் கூடுதலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு 7.15 மணிக்கு கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் அவரது சமாதிக்கு வந்தனர். அவர்களது வருகையையொட்டி கருணாநிதி சமாதியில் உதயசூரியன் வடிவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து அண்ணா சமாதி அருகே நிழற்குடையில் சிறிது நேரம் அனைவரும் தஞ்சம் அடைந்தனர். மழை நின்றபிறகு செல்லலாம் என்று நினைத்திருந்தனர். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால் குடைபிடித்தபடி கருணாநிதி சமாதிக்கு இரவு 7.40 மணிக்கு வந்தனர்.

கருணாநிதி சமாதியில் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் வாரிசுகள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி ஆகியோர் கூட்டாக சமாதியில் மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் சமாதியை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கருணாநிதி சமாதியை தொட்டு வணங்கி அங்கிருந்து இரவு 8 மணியளவில் சோகத்துடன் புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞரை காவேரி ஆஸ்பத்திரி கொண்டு சென்றதில் இருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை, அழுத கண்களோடு ஆறுதல் அளித்த அனைவருக்கும் செயல் தலைவர் என்ற முறையிலும், கலைஞரின் மகனாகவும் என்னுடைய கண்ணீர் நிறைந்த நன்றிகள்”, என்று குறிப்பிட்டு உள்ளார்.

நடிகர் விவேக் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில், “இன்னொரு இரவு முடியலாம். இன்னொரு பகல் விடியலாம். உன் உடல் மண்ணில் மடியலாம். ஆனால் உன் புகழ், பேசும் உலகெலாம்”, என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story