அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு பதிவாளர் தான் காரணம் பேராசிரியர்கள் பகீர் புகார்


அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு பதிவாளர் தான் காரணம்  பேராசிரியர்கள் பகீர் புகார்
x
தினத்தந்தி 10 Aug 2018 5:22 AM GMT (Updated: 10 Aug 2018 5:43 AM GMT)

அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் பற்றி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு பகீர் கடிதம் எழுதி உள்ளது.

சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ் பெற்றதாகும். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு உலகளவில் உள்ள நிறுவனங்கள் அதிகளவில் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்துகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் தரம் வாய்ந்த மாணவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் உலகளவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் இங்குள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

ஆனால் இந்த பெயரையும், புகழையும் கெடுக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலக அளவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை அவநம்பிக்கையோடு பார்க்க வைத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்  முறைகேடுகளுக்கு பதிவாளர் கணேசன் தான் காரணம் என பல்கலைக்கழக ஆசியர் கூட்டமைப்பு   கவர்னர் பன்வாரி லாலுக்கும், துணை வேந்தர் சூரப்பாவுக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.

பதிவாளர் கணேசனை பதவியில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. பல்கலைக்கழக முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன்தான் காரணம் என குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Next Story