திராவிட இயக்கத்தின் பிரகாச சூரியனாக வாழ்ந்த ‘கருணாநிதி மறைவு தமிழுக்கு பேரிழப்பு’


திராவிட இயக்கத்தின் பிரகாச சூரியனாக வாழ்ந்த ‘கருணாநிதி மறைவு தமிழுக்கு பேரிழப்பு’
x
தினத்தந்தி 11 Aug 2018 10:00 PM GMT (Updated: 11 Aug 2018 8:10 PM GMT)

“திராவிட இயக்கத்தின் பிரகாச சூரியனாக வாழ்ந்த கருணாநிதியின் மறைவு, தமிழுக்கான பேரிழப்பு”, என்று மலேசியா மேல்சபை எம்.பி. டான்ஸ்ரீ நல்லா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தேசிய தலைவரும், மலேசியா நாட்டின் மேல்சபை எம்.பி.யுமான டான்ஸ்ரீ கே.எஸ்.நல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் இனத்தின் தனிப்பெரும் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார், கருணாநிதி. அவரது மறைவு பெரும் சோகத்தோடு நம்மை தாக்குகிறது. பெரியாரின் லட்சியம், அண்ணாவின் கொள்கை, தி.மு.க. கோட்பாடு ஆகியவை மட்டுமே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தவர், கருணாநிதி. திராவிட இயக்கத்தின் பிரகாச சூரியனாக வாழ்ந்த கருணாநிதி, அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்னை தமிழுக்கு மகுடம் சூட்டியவர். 6-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா நடத்தியபோது, அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் பணியாற்றினேன். அந்த மாநாட்டில் பங்கேற்று மாநாட்டுக்கே பெருமை சேர்ந்தவர் கருணாநிதி.

அன்று ஆரம்பித்த எங்கள் அருமை உறவு தமிழகம் செல்லும் பொது அவ்வப்போது கருணாநிதியை சந்தித்துக் கொள்வதிலும், அன்பாக கலந்துரையாடிக் கொள்வதிலும் நீட்சி கண்டது. எதுகை மோனைத் தமிழால் எவரையும் சுண்டியிழுக்கும் தமிழ் மூதறிஞர் அவர். தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தி தமிழர்களை தலைநிமிர செய்த பெரும் தலைவரை இழந்து நிற்பது தமிழுக்கே பேரிழப்பு. ஒரு அழகான மனிதரை இழந்து நிற்பது தமிழருக்கே உயிரிழப்பு.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஓர் அடையாளத்தை ஏற்படுத்திய கருணாநிதி, தமிழ் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். தமிழின் ஒவ்வொரு எழுத்திலும் அவரின் உயிர் மூச்சு இருக்கும். பெரும் தலைவரையும், குடும்பத் தலைவரையும் பிரித்து துயரத்துடன் இருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story