கருணாநிதி சமாதியில் நடிகர் பிரசாந்த், நடிகை ஜெயசித்ரா அஞ்சலி


கருணாநிதி சமாதியில் நடிகர் பிரசாந்த், நடிகை ஜெயசித்ரா அஞ்சலி
x
தினத்தந்தி 11 Aug 2018 10:15 PM GMT (Updated: 11 Aug 2018 8:12 PM GMT)

கருணாநிதி சமாதியில் நேற்று நடிகர் பிரசாந்த், நடிகை ஜெயசித்ரா உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியில் நேற்று 4-வது நாளாக தொடர்ந்து பொது மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை முதலே சாரல் மழை பெய்துகொண்டு இருந்தபோதும் கருணாநிதியின் சமாதிக்கு குடை பிடித்தபடி பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வந்தனர்.

கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது மகன் ஆதித்யா மற்றும் உறவினர்களுடன் வந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை தான் நடத்திவரும் ‘சன்ஷைன்’ பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் வந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் தியாகராஜன், பிரசாந்த், மயில்சாமி, மனோபாலா, போஸ் வெங்கட் உள்ளிட்டோரும் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. அலெக்சாண்டர், அரசு ஊழியர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியம் தலைமையில் அரசு ஊழியர்கள், கிராமியப் பாடகர் தம்பதி புஷ்பவனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி, அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தவந்த பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, கு.க.செல்வம், ஜெ.அன்பழகன், ரங்கநாதன் ஆகியோர் மதிய உணவு வழங்கினர். சமாதியை சுற்றிலும் இரும்பு சங்கிலியால் நிரந்தர தடுப்பு வேலி அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

Next Story