18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு: முதல்-அமைச்சர் தரப்பு வக்கீல் வாதம் நிறைவு
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் முதல்-அமைச்சர் தரப்பு வக்கீல் வாதம் நிறைவடைந்தது.
சென்னை,
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் தமிழக முதல்-அமைச்சர் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் நேற்று ஆஜராகி வாதிட்டார்.
அவர் தன் வாதத்தில், ‘முதல்-அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் 18 பேரும் கடிதம் கொடுத்துள்ளனர். இதன்மூலம் சட்டசபையில் முதல்-அமைச்சருக்கு பெரும்பான்மை உள்ளதா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கவர்னரை 18 பேரும் தள்ளியுள்ளனர். இதன்மூலம், அந்த 18 பேரும் கட்சி உறுப்பினர் பதவியை தானாகவே விட்டுக் கொடுத்துவிட்டதாகவே கருத முடியும். அதனால் தான் அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, முதல்-அமைச்சரை மாற்றுவது குறித்து கவர்னர் முடிவெடுக்க முடியாது. 18 பேரும் எந்த நோக்கத்திற்காக கடிதம் கொடுத்தனரோ, அதே நோக்கத்தை கருத்தில் கொண்டு தான் தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது‘ என்று கூறினார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் தரப்பு வக்கீல் வாதம் நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) அரசு தலைமை கொறடா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிட உள்ளார்.
Related Tags :
Next Story