11 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை 2 பேர் கைது


11 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2018 10:42 PM GMT (Updated: 14 Aug 2018 10:42 PM GMT)

11 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

குன்னம்,

பெரம்பலூரை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் கமருன்னிஷா (வயது 27). பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (33). இவர் 11 வருடங்களுக்கு முன்பு கார் பேட்டரி கடையில் வேலை பார்த்தார்.

அப்போது கமருன்னிஷா ஆசிரியை பயிற்சி பள்ளியில் படித்தார். அந்த நேரத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கமருன்னிஷாவுக்கு குன்னம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. ஆனந்த் பெரம்பலூரில் சொந்தமாக கார் பேட்டரி விற்பனை செய்யும் கடை தொடங்கினார்.

காதலில் பிளவு

இந்நிலையில் அவர்கள் காதலில் திடீர் பிளவு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கமருன்னிஷாவை, ஆனந்த் நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் கமருன்னிஷா மறுத்து விட்டார்.

இதனிடையே கமருன்னிஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கமருன்னிஷாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

மிரட்டல்

கமருன்னிஷா நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்த், அவரது நண்பர் பெரம்பலூர் தேரடி பகுதியை சேர்ந்த அரவிந்த் (27) ஆகியோர் கமருன்னிஷாவை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தனர்.

திடீரென கமருன்னிஷாவை ஆனந்த் வழிமறித்து நிறுத்தினார். கமருன்னிஷாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஆனந்த் மீண்டும் வற்புறுத்தினார். அதற்கு அவர் முடியாது என்று கூறி புறப்பட முயன்றார். இதனால் ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கமருன்னிஷா முகத்தில் குத்தி விட்டு என்னை திருமணம் செய்யாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். அப்போதும் கமருன்னிஷா, உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை

இதனால் ஆத்திரத்தில் கமருன்னிஷா கழுத்தில் கத்தியால் குத்தியதோடு, கழுத்தை அறுத்தார். கமருன்னிஷா அலறியபடி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே ஆனந்தும், அரவிந்தும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அப்போது 2 பேரையும் அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த கமருன்னிஷாவை அவர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கமருன்னிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்த், அரவிந்த் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story