மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு


மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு
x
தினத்தந்தி 16 Aug 2018 2:54 AM GMT (Updated: 16 Aug 2018 2:54 AM GMT)

மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

இந்த அணைகள் தன் முழு கொள்ளளவை எட்டியுள்ள போதிலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணைகளுக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றி வருகிறார்கள். கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்து அங்கிருந்து சேலம் மாவட்டம் மேட்டூரை வந்தடைகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 89 ஆயிரத்து 15 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 88 ஆயிரத்து 518 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 120.31 அடியாக இருந்தது.

நேற்று அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. நேற்று மதியம் 2 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 120.25 அடியாக இருந்தது. மாலை 5 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1.55 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 120.3 அடியாகவும், நீர் இருப்பு 93.65 டி.எம்.சியாகவும் உள்ளது.  இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மீண்டும் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.


Next Story