கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு
கேரளாவுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை,
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் துயரத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பங்கேற்கவும், உதவி செய்யவும் முடிவெடுத்துள்ளோம்.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பொதுமக்களில் ஒரு பகுதி என்ற நிலையில் நிவாரண நிதியாக எங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து நிவாரண நிதியாக வழங்க உரிய ஆணை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூத்த சங்கம் என்ற முறையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது. இதற்கு முன் உதாரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வினை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் இதுபோன்று தங்கள் பங்களிப்பினை செலுத்தியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story